“தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில் நிதி திரட்டும் கருத்தரங்கங்கள்

  வலைத்தமிழ்
“தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில் நிதி திரட்டும் கருத்தரங்கங்கள்

“தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில் நிதி திரட்டும் கருத்தரங்கங்கள்

“தமிழ் அறிவு வளாகம்” என்பது தமிழ் நாட்டில் உள்ள  ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் &அச்சு கலாச்சார அருங்காட்சியகம், சிந்து ஆராய்ச்சி மையம் &சிந்து விளக்க மையம் மற்றும் பொதுக் கோளத்தில் ஆய்வு மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கிளை அமைப்பாகும். இதற்கான தனி கட்டிடம் அமைக்க முப்பது கோடியில் ஒரு திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் அதன் பங்கை அறிவித்துள்ளது. மேலும் தமிழ் அறிவு வளாகக் குழு உலகத் தமிழர்களிடமும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அமெரிகக்காவில் உள்ள தமிழ் இருக்கை நிறுவனம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் பல அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் தங்களது மாகாணங்களில் கருத்தரங்கங்கள் நடத்துகின்றன. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்  வட அமெரிக்க முருகன் கோவிலில் ஜூன் 29-ஆம் நாளன்று சிந்து சமவெளி 100 என்ற தலைப்பில் ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் மதிப்புறு ஆலோசகர் சிந்து சமவெளி ஆய்வு மையம் மற்றும் சுந்தர் கணேசன் இயக்குநர்  ரோஜா முத்தையா ஆராய்ச்சி மையம் ஆகியோர் தலைமையில்கருத்தரங்கம் நடத்தினர்.

தமிழ் இருக்கைத் தலைவர் மருத்துவர் விஜய் ஜானகிராமன், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத் தலைவர் அறிவுமணி இராமலிங்கம், கொழந்தவேல் இராமசாமி, வாசிங்டன் சிவா, திருக்குறலார் இர. பிரபாகரன், நாஞ்சில் இ பீற்றர், முனைவர் அரசு செல்லையா, முனைவர் பாலா குப்புசாமி, முனைவர் சொர்ணம் சங்கர் மற்றும் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவர் விஜய் ஜானகிராமன், வாசிங்டன் சிவா மற்றும் முனைவர் பாலா குப்புசாமி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசினர். முனைவர் பாலா குப்புசாமி அவர்கள் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களைப் போற்றி ஒரு நீண்ட கவிதை படைத்தார். அதிலிருந்து சில வரிகள் இங்கே:

“ஆர். பாலகிருஷ்ணன், நீங்கள்…பன்முகம் கொண்ட பகுத்தறிவாளர்!

ஆம், அரசுப்பணியில் அசுரர், ஆராய்ச்சியாளர், கவிஞர், எழுத்தாளர்,

எனப் பன்முகம் கொண்ட பகுத்தறிவாளர்!

உங்களின் முப்பது ஆண்டுக் கால ஆராய்ச்சி!தமிழின் புகழை மேலும் நிறுத்துகிறது கோலோச்சி!

வரலாற்றில் மட்டுமே படித்ததுண்டு. “ஆற்றங்கரை நாகரிகம்”

உங்களின்  முயற்சியில்…அது கண்கூடாய் இன்று!

“ஒரு பண்பாட்டின் பயணம்”தமிழ்ப்பணியின் சிகரம்!”

சிந்து சமவெளி நாகரீகம், ஒரு பண்பாட்டின் பயணம் புத்தகம் ஆராய்ச்சி ஆகியவற்றைப் பற்றி  ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் நீண்ட உரையாற்றினார். “தமிழ் அறிவு வளாகம்” அதன் அவசியம் பற்றி சுந்தர் கணேசன் இயக்குநர்  ரோஜா முத்தையா ஆராய்ச்சி மையம் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் அவையோர் கேட்ட பல கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.

கருத்தரங்கம் வந்தோர்கள் பலர் நிதி அளித்தனர். மேலும் பலர் “ஒரு பண்பாட்டின் பயணம்” புத்தகத்தை  ஆர். பாலகிருஷ்ணன் அவர்களிடம் நேரடியாக வாங்கியும் நிதி அளித்தனர். இது அமெரிக்காவில் இவர்களால் நடத்தப்பட்ட முதல் நிதி திரட்டும் கருத்தரங்கம். மேலும், வரும் நாட்களில் டல்லாஸ், சான் அன்டோனியோ டெக்சாஸ், சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியா, அட்லாண்டா ஜார்ஜியா, பாஸ்டன் மாசசூசெட்ஸ் ஆகிய இடங்களில் கருத்தரங்கங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தமிழ் அறிவு வளாகம் (Roja Muthiah Research Library) என்பது தமிழ்க் கலை, இலக்கியம், வரலாறு மற்றும் கலாச்சார பண்பாடுகளை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒரு முக்கியமான நூலகம் ஆகும்.இந்த நூலகத்தில் 300,000-க்கும் மேற்பட்ட நூல்கள், பத்திரிகைகள், பிற எழுதுத் தகடுகள், மற்றும் பலவகையான ஆவணங்கள் உள்ளன. இது தமிழ் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.அதன் நூலகத் தொகுப்பு ரோஜா முத்தையா என்பவரின் தனிப்பட்ட நூல் சேகரிப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் பத்திரிகைகளின் மாபெரும் சேகரிப்பாளராகத் திகழ்ந்தார். இந்த நூலகம் சென்னையில் அமைந்துள்ளது, மேலும் இது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் அறிவு வளாகப் புதிய கட்டிடம் அமைக்கும் பணிக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால் தமிழ் இருக்கை நிறுவனம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை அல்லது உங்கள் மாகாணத் தமிழ்ச்சங்க இயக்கினர் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.

நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்

மூலக்கதை